தாய்லாந்து நாட்டினர் ஈரோட்டுக்கு வந்து சென்ற 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடை; 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


தாய்லாந்து நாட்டினர் ஈரோட்டுக்கு வந்து சென்ற 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடை; 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 23 March 2020 9:30 PM GMT (Updated: 23 March 2020 6:30 PM GMT)

தாய்லாந்து நாட்டினர் ஈரோட்டுக்கு வந்து சென்ற 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஈரோடு, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மத்திய அரசால் ‘தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களாக’ அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சென்ற பஸ்களும், கர்நாடகாவில் இருந்து ஈரோட்டுக்கு வந்த பஸ்களும் நிறுத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாநில எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலாவுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலர் ஈரோடு மாவட்டத்துக்கு வந்தனர். பின்னர் இவர்கள் தொழுகைக்காக ஈரோடு மஜீத் வீதி மற்றும் கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வந்தபோது தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இவர்களை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர். இதில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

இருப்பினும் அவர்களுடன் வந்தவர்களும், நெருங்கிய தொடர்பில் இருந்த 10 பேர் என மொத்தம் 13 பேர் தனி வார்டில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுடைய பரிசோதனை விபரம் இன்னும் வரவில்லை. வந்த பின்னர் தான் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? இல்லையா என்பது தெரியவரும்.

தாய்லாந்து நாட்டுக்காரர்கள் வந்து சென்ற ஈரோடு புதுமஜீத் வீதி, சுல்தான் பேட்டை, கந்தசாமி வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி, கொல்லம்பாளையம், ஓட்டுக்கார சின்னையா வீதி, ஹசன் வீதி உள்பட 9 வீதிகள் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்குள்ள 169 குடும்பத்தை சேர்ந்த 696 பேர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மேற்கண்ட 9 வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளியே செல்வதற்கும், வெளி நபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை, போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் அவர்களுக்காக மொபைல் ஏ.டி.எம். உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய ஸ்டிக்கர் வீடுகளில் அடையாளத்துக்காக ஒட்டப்பட்டுள்ளது. 696 பேரின் கைகளிலும் தனிமுத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 15 நாளில் உரிய பரிசோதனைக்குப்பின், வழக்கமான நடைமுறைக்கு மாறுவார்கள். இதற்கிடையில் மைலம்பாடி தொழிற்சாலையில் இருந்து வெளிமாநிலத்தவர் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறுகையில், `கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக ஊடகம் மற்றும் வலைதளங்களில் பரப்புவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தவறான குறிப்புகளை குறுஞ்செய்தியின் மூலம் பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் தும்மல் எச்சில் மூலம் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். மேலும் தும்மல் வரும்போது தங்களது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு மற்ற நபர்களுக்கு பரவுவதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமானது அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் வழங்கிக்கொண்டே இருக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அச்சம் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்` என்றார்.

Next Story