கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு


கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 6:33 PM GMT)

கடலூர் துறைமுகத்தில் தேக்கமடைந்த 300 டன் மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதன் காரணமாகவும், மக்கள் ஊரடங்கையொட்டியும் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்த மீனவர்கள் நேற்று முன்தினம் கரைக்கு திரும்பினர்.

300 டன்

இதில் மீனவர்களின் வலைகளில் சூரை, திருக்கை உள்ளிட்ட வகை மீன்கள் சுமார் 300 டன் அளவில் சிக்கியிருந்தன. ஆனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டிருந்ததாலும், நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு நடந்ததாலும் வியாபாரிகள் யாரும் மீன்களை வாங்க வரவில்லை. துறைமுக பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் 300 டன் மீன்களும் விற்பனை செய்யப்படாமல், கடலூர் துறைமுகத்திலேயே தேக்கமடைந்திருந்தது. இதன் காரணமாக மீனவர்கள் பிடிபட்ட மீன்களை ஐஸ் பெட்டிகளில் போட்டு தங்களது படகுகளிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனால் நேற்று காலை வரை மீன்கள் விற்பனையாகாததால் மீனவர்கள் பெரிதும் கவலையடைந்தனர்.

அதிகாரிகள் அறிவுரை

இதற்கிடையே நேற்று மதியம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள், மீனவர்களிடையே ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி விலை நிர்ணயம் செய்யாமல் மீன்களை லாரிகளில் ஏற்றி சென்றனர். இது தவிர கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் துறைமுகத்திற்கு வந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நிற்க கூடாது என அறிவுரை வழங்கினர்.

Next Story