மக்கள் சுய ஊரடங்கு தளர்வு: மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடின கடைகள் திறப்பு-ஏ.டி.எம்.மையங்களில் அலைமோதிய கூட்டம்


மக்கள் சுய ஊரடங்கு தளர்வு: மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடின கடைகள் திறப்பு-ஏ.டி.எம்.மையங்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 23 March 2020 11:45 PM GMT (Updated: 23 March 2020 7:57 PM GMT)

மக்கள் சுய ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் கரூர் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடின. கடைகள் திறக்கப்பட்டது. ஏ.டி.எம்.மையங்களில் கூட்டம் அலைமோதியது.

கரூர்,

கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி உள்பட உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் கொரோனாவை விரட்டி அடிக்கும் பொருட்டு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் அரசு வேண்டுகோள் விடுத்ததன் பேரில் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் திருமாநிலையூரில் உள்ள கரூர் கிளை பணிமனைகளில் இருந்து நகர்புற, புறநகர், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பஸ் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டு போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. எனினும் பயணிகளின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

60 சதவீத பஸ்கள் இயங்கியது

கரூர் பஸ் நிலையத்திலுள்ள போக்குவரத்து கழக விசாரணை அலுவலகத்தில் இருந்தபடியே கரூர் மண்டல பொதுமேலாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் முகக்கவசம் அணிந்தவாறே பஸ் போக்குவரத்தினை கண்காணித்தனர். தேவைப்படுகிற பட்சத்தில் கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக கரூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், கரூர் மண்டலத்துக்கு உட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி பணிமனைகளில் இருந்து 262 நகர்புற, புறநகர், விரைவு, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தற்போது 161 (60 சதவீத பஸ்கள்) பஸ்கள் இயக்கத்தில் உள்ளன. ஒரே வழித்தடத்தில் அதிகமாக இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கையை மட்டும் குறைத்து உள்ளோம். புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கம் இல்லை என்றனர்.

ரெயில் முன்பதிவு கட்டணம்

எப்போது கிடைக்கும்?

இதே போல் கொரோனா பரவலை தடுக்க மக்களை ஒன்றுகூட வைக்காத வகையில் மத்திய அரசு பயணிகள்-எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தியுள்ளது. இதனால் கரூர் ரெயில் நிலையத்தின் முன்புற நுழைவு வாயிலில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணச்சீட்டு வழங்கும் இடம், நடைமேடை வெறிச்சோடி காணப்படுகிறது. கரூரிலிருந்து இயக்கப்படுகிற கரூர்-திருச்சி பயணிகள் ரெயிலானது, ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்து சேவை ரத்தானதை அறியாமல் சில பயணிகள் கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. மேலும் மார்ச் 31-ந்தேதிக்குள் பயணத்தை முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிலர், தாங்கள் கட்டிய பணம் எப்போது கிடைக்கும்? என கேட்பதற்காக வந்தனர். அப்போது, மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு அரசு அறிவுறுத்தலின் பேரில் சேவை தொடங்கியதும், முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என தகவல் மைய அதிகாரிகள் தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர். ரெயில்வே பார்சல் அலுவலகம் மூடப்பட்டு இருந்ததால், சரக்குகளை வெளியிடங்களுக்கு அனுப்ப முடியாத நிலை இருந்தது. ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்ட சரக்குகளும் 31-ந்தேதிக்கு பிறகே அனுப்பி வைக்கப்படும் என ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.

கூட்டம் அலைமோதல்

மேலும் பணம் எடுத்தல், செலுத்துதல், காசோலை மாற்றம் போன்றவை குறித்து வங்கிகள் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நேற்று கரூர் செங்குந்தபுரம், கரூர் மாரியம்மன் கோவில்தெரு, கோவைரோடு, பழையபைபாஸ் ரோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் வங்கிகளிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூட்டம் அதிகமாக இருந்தது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஏற்கனவே அரசு அறிவுறுத்தலின்பேரில் விளையாட்டு அரங்குகள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை பூட்டப்பட்டன. அந்த வகையில் நேற்று ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட போதும் கூட, ஓட்டல்கள், டீக்கடைகள், வாகன பழுதுபார்க்கும் கடைகள், மருந்தகங்கள், எலக்ட்ரானிக் உதிரி பாக கடைகள், பழக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மட்டும் திறந்திருந்தன.

75 நகைக்கடைகள் அடைப்பு

நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை வருகிற 31-ந்தேதி வரை பூட்டப்படுவதாக அந்தந்த கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. விசேஷ நிகழ்ச்சிகளுக்காக ஜவுளி எடுக்க வந்தவர்கள் கடை பூட்டி கிடப்பதை அறிந்ததும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஓட்டல்கள் உள்ளிட்டவை திறந்திருந்த போதும் கூட அதில் உணவு விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே நடந்தது.

கரூர் ஜவகர்பஜாரில் நகைக்கடை வைத்து நடத்தி வரும் தண்டாயுதம் தெரிவிக்கையில், தங்க நகை ஆபரணங்கள் உருவாக்கத்திற்கு கரூர் பெயர் பெற்ற நகரம் ஆகும். இதனால் கரூர் நகரில் மட்டும் 75 நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு 31-ந்தேதி வரை மூடப்பட்டிருப்பதால் நகைகளை ஆர்டர் செய்திருந்தவர்களுக்கு அதனை டெலிவரி செய்ய சற்று சிரமம் தான். எனினும் பொதுநலன் கருதி நகைக்கடைகளை மூடியுள்ளோம் என்றார்.

103 நூலகங்கள்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட மையநூலகம், ஊர்ப்புற நூலகம், கிளைநூலகம், பகுதிநேர நூலகம் என மொத்தம் 103 நூலகங்கள் இருக்கின்றன. வருகிற 31-ந்தேதி வரை நூலகத்திற்குள் வாசகர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூலகங்கள் ஆட்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் புத்தகங்களை ரேக்குகளில் அடுக்கி வைப்பது, புத்தக எண்ணிக்கையை அளவிடுவது உள்ளிட்ட பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கோவில்கள் பூட்டப்பட்டிருந்த போதும் கூட, ஆகமவிதிப்படி பூஜைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் உள்ள ஒலிபெருக்கிகளில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

வர்த்தகம் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் ஜவுளி ஏற்றுமதி, பஸ்பாடி, கொசுவலை உற்பத்தி உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதிலும் கரூர் நகரம் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரமாகும். தற்போது கொரோனா பரவலை தடுக்க கடைகள், வணிக-தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு வருவதால் வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளது.

எனினும் மக்கள் கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகை செய்யும் விதமாக இருக்கும். எனவே கொரோனா ஒழிப்பே அனைத்து தொழில் நிறுவனத்தினர், மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று கரூர் தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story