கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தடையை மீறி கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட 3 தனியார் பஸ்கள் பறிமுதல்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தடையை மீறி கர்நாடகாவுக்கு இயக்கப்பட்ட 3 தனியார் பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2020 11:30 PM GMT (Updated: 23 March 2020 8:28 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தடையை மீறி கர்நாடகாவிற்கு இயக்கிய 3 தனியார் பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஓசூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கும், பெங்களூருவில் இருந்து ஓசூருக்கும் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய 2 மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், ஓசூரில் இருந்து பெங்களூருவிற்கு தனியார் பஸ்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 3 தனியார் பஸ்கள் பெங்களூரு நோக்கி சென்றன. தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே இந்த தனியார் பஸ்கள் சென்று கொண்டிருந்தது.

3 பஸ்கள் பறிமுதல்

அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அந்த பஸ்களை அங்கு நிறுத்தாமல் டிரைவர்கள் வேகமாக ஓட்டி சென்றுவிட்டனர். பின்னர் அதிகாரிகள் விரட்டி சென்று, அத்திப்பள்ளியில் உள்ள சுங்கச்சாவடி அருகே 3 பஸ்களையும் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர், அரசின் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதாக கூறி 3 தனியார் பஸ்களையும் ஓசூர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஈஸ்வரமூர்த்தி பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்.

Next Story