நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் பிரிவில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 8:39 PM GMT)

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நபர்களை தனிமைப்படுத்தி வைக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள பிரிவை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதக்கூடிய காய்ச்சல் கண்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தும் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரிவை மாவட்ட கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தனிமைப்படுத்தும் பிரிவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதக்கூடிய காய்ச்சல் கண்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க 78 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். மேலும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டு உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவினையும் பார்வையிட்டனர்.

கிருமிநாசினி

தொடர்ந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி மூலப்பொருட்கள் வைக்கப்பட்டு உள்ள கிடங்கினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மருந்து அடிக்கும் உபகரணங்கள் தேவையான அளவில் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பா‌ஷா உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள்

பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அவ்வாறு வெளியே சென்று வீடு திரும்பும்போது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மாவட்ட எல்லையை பொறுத்த வரையில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வர எந்த தடையும் ஏற்படுத்தவில்லை. நமது மாவட்டத்தில் 2 பேருக்கு சந்தேகத்தின் பேரில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story