நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்


நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் சாவு: படுகாயம் அடைந்த கணவரும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 23 March 2020 11:15 PM GMT (Updated: 23 March 2020 9:10 PM GMT)

நாகர்கோவிலில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவத்தில் படுகாயம் அடைந்த கணவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் தினகரன் சுந்தரம் (வயது 33), ஒரு ஓட்டலில் ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி எஸ்தர் ராணி (26). இவர்கள் இருவரும் கடந்த 21-ந் தேதி மளிகை பொருட்கள் வாங்கி விட்டு கலெக்டர் அலுவலகம் முன் வந்த போது சாலை ஓரம் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளை இயக்கினார்.

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் லேசாக மோதிக்கொண்டன. இதில் நிலைதடுமாறிய தினகரன் சுந்தரமும், எஸ்தர் ராணியும் ஸ்கூட்டருடன் சேர்ந்து சாலையில் விழுந்தனர். அந்த சமயத்தில் பின்னால் வந்த அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் தினகரன் சுந்தரம் மற்றும் எஸ்தர் ராணி மீது ஏறி இறங்கியது. அதாவது அரசு பஸ்சின் சக்கரத்தில் 2 பேரும் சிக்கிக் கொண்டனர்.

கணவர் சாவு

இந்த விபத்தில் எஸ்தர் ராணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். தினகரன் சுந்தரம் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனே தினகரன் சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் தினகரன் சுந்தரம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் சக்கரத்தில் சிக்கி எஸ்தர் ராணி இறந்த அடுத்த நாளே அவருடைய கணவரும் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story