கொரோனா வைரஸ் பீதியால் சளி, காய்ச்சல் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுப்பு


கொரோனா வைரஸ் பீதியால் சளி, காய்ச்சல் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:45 PM GMT (Updated: 23 March 2020 9:28 PM GMT)

கொரோனா பீதியால் சளி, காய்ச்சல் பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு பரிசோதனைக்காக படையெடுத்து வருகின்றனர்.

வேடசந்தூர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்துள்ளன. இருப்பினும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். சளி, காய்ச்சல், மூச்சு விடுவதில் திணறல் உள்ளிட்டவை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறி என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சளி, காய்ச்சல் வந்தாலே மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சாதாரண சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் பீதியால் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக படையெடுத்து வருகின்றனர். இதில் பதிவு சீட்டு எடுக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பின்னர் பதிவு சீட்டு எடுத்து டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்கின்றனர். அதிலும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் முகத்தில் முக கவசம் அணியாமல் நிற்கின்றனர். அப்போது அவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதனால் மற்றவர்கள் அச்சத்தோடு நிற்க வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை

இதேபோல் மற்ற பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பரிசோதனைக்காக படையெடுத்து வருகின்றனர். எனவே வேடசந்தூர் மட்டுமின்றி பிற அரசு மருத்துவமனைகளின் முன்பும் மக்கள் நலன்கருதி கிருமிநாசினி மருந்துடன் கூடிய கை கழுவும் மையம் அமைக்கவும், மருத்துவமனைக்கு வருவோருக்கு இலவசமாக முக கசவம் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story