பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினம்; மாணவ-மாணவிகள் கருத்து


பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினம்; மாணவ-மாணவிகள் கருத்து
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 10:49 PM GMT)

பிளஸ்-1 வரலாறு தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

திருப்பூர், 

பிளஸ்-1 மாணவர்களுக்கு வரலாறு, உயிரியல், தாவரவியல், வணிக கணிதம், நெசவு தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை, அடிப்படை மின்னணு என்ஜினீயரிங் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. வரலாறு பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவ-மாணவிகள் 2,350 பேர், தனித்தேர்வர்கள் 62 பேர் என்று மொத்தம் 2,412 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 2,011 பேர், தனித்தேர்வர்கள் 47 பேர் என்று மொத்தம் 2,058 பேர் தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 339 பேர், தனித்தேர்வர்கள் 15 பேர் என்று மொத்தம் 354 பேர் தேர்வை எழுத வரவில்லை.

உயிரியல் பாடத்தேர்வை பள்ளி மாணவர்கள் 6,522 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 6,216 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 306 பேர் தேர்வை எழுத வரவில்லை. தாவரவியல் பாடத்தேர்வை பள்ளி மாணவர்கள்375 பேர், தனித்தேர்வர்கள் 4 பேர் என்று மொத்தம் 379 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் 321 பேர், தனித்தேர்வர்கள் 3 பேர் என்று மொத்தம் 324 பேர் தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்கள் 54 பேர் தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 55 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வணிக கணித பாடத்துக்கான தேர்வை பள்ளி மாணவர்கள் 1,696 பேர்,, தனித்தேர்வர் 1 என்று மொத்தம் 1,697 பேர் எழுதஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் பள்ளி மாணவர்கள் மட்டும் 27 பேர் தேர்வு எழுத வரவில்லை. 1,670 பேர் மட்டும் தேர்வை எழுதினார்கள். நெசவு தொழில்நுட்பத்தேர்வை பள்ளி மாணவர்கள் 28 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவர் தேர்வு எழுத வரவில்லை. 27 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள்.

அலுவலக மேலாண்மை தேர்வை பள்ளி மாணவர்கள் 194 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. 177 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். அடிப்படை மின்னணு என்ஜினீயரிங் தேர்வை பள்ளி மாணவர்கள் 157 பேர் எழுத ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இவர்களில் 8 பேர் தேர்வு எழுத வரவில்லை. 149 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். எந்த வித ஒழுங்கீனமான செயல்களும் இல்லாமல் தேர்வு அமைதியாக நடந்து முடிந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் தெரிவித்தார்.

தேர்வு எழுதிவிட்டு தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

மணிமொழி (ராமகிருஷ்ணா வித்யாலயா) உயிரியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருந்தன.

வினோதினி (ராமகிருஷ்ணா வித்யாலயா): உயிரியல் பாடத்தேர்வில் நான் படித்திருந்த முக்கியமான பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி விட்டேன்.

தினேஷ் (கே.எஸ்.சி.அரசு பள்ளி): அலுவலக மேலாண்மை தேர்வில் கேட்கப்பட்டிருந்த 1 மதிப்பெண்களுக்கான வினாக்களை தவிர அனைத்து வினாக்களும் மிகவும் கடினமாகவே இருந்தன.

ஹரிஹரன் (கே.எஸ்.சி.அரசு பள்ளி): வரலாறு பாடத்தில் கேட்கப்பட்டிருந்த அனைத்து வினாக்களும் மிகவும் கடினமாக இருந்தது.

அதே போல் வரலாறு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் பெரும்பாலானவர்கள் தேர்வு கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story