கேரள வியாபாரிகள் வராததால் குளச்சலில் கேரை மீன்கள் விலை வீழ்ச்சி கிலோ ரூ.40–க்கு விற்பனை


கேரள வியாபாரிகள் வராததால் குளச்சலில் கேரை மீன்கள் விலை வீழ்ச்சி கிலோ ரூ.40–க்கு விற்பனை
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 4:47 PM GMT)

கேரள வியாபாரிகள் வராததால் குளச்சலில் கேரை மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கிலோ ரூ.40–க்கு விற்பனையானது.

குளச்சல், 

கேரள வியாபாரிகள் வராததால் குளச்சலில் கேரை மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது கிலோ ரூ.40–க்கு விற்பனையானது.

கேரை மீன்கள் 

குளச்சலில் 300 விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் 10–க்கும் மேற்பட்ட நாட்கள் தங்கி மீன்பிடிப்பார்கள்.

அந்த வகையில் குளச்சலில் இருந்து தற்போது மீன்பிடித்து வரும் மீனவர்களின் வலையில் கேரை மீன்கள் அதிகமாக சிக்குகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மீன்சந்தைகள் மூடப்பட்டுள்ளதாலும், கேரளாவுக்கு மீன்கள் கொண்டு செல்ல முடியாததாலும் மீன் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

விலை வீழ்ச்சி 

இந்தநிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று ஏராளமான மீனவர்கள் குளச்சலுக்கு கரை திரும்பினர். இதில் கேரை மீன்களே அதிகம் சிக்கியிருந்தது. மீன் ஏலக்கூடத்தில் மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கேரள வியாபாரிகள் யாரும் வராததால் சில்லறை விலைக்கே விற்பனையானது.

அந்த வகையில் கேரை மீன்கள் கிலோ ரூ.40–க்கு விற்பனையானது. மீன்கள் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை அடைந்தனர். இதுகுறித்து குளச்சல் மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், 3 மாதங்களுக்கு முன்பு குளச்சலில் கேரை மீன்கள் கிடைக்க தொடங்கிய போது கிலோ ரூ.170–க்கு மேல் விற்பனை ஆனது. தற்போது கேரளாவில் மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால் கேரள வியாபாரிகள் மீன்கள் வாங்க வரவில்லை. இதனால் சில்லறை விலைக்கே விற்கப்பட்டதால், கேரை மீன்கள் விலையில் சரிவு ஏற்பட்டது என்றார்.

Next Story