நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 7:22 PM GMT)

சென்னையில் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகை மீட்டுத்தரக்கோரி, நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்னை சென்றனர். அப்போது சென்னை காசிமேடு மீனவர்கள் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறி, நாராயணசாமியின் விசைப்படகை சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்த படகு காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு விதிகளுக்குட்பட்ட விசைப்படகை காசிமேடு மீனவர்கள் சிறைபிடித்ததாகவும், அந்த படகை மீட்டுத்தர வேண்டும் என்றும் அக்கரைப்பேட்டை மீனவர்கள், மீன்வளத்துறையினரிடம் வலியுறுத்தினர். மேலும் நாகை கலெக்டர் அலுவலகத்திலும் இதுகுறித்து மனு கொடுத்தனர்.

குடும்பத்தினருடன் மீனவர் தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட படகை விடுவிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் அங்குள்ள மீனவர்கள், விசைப்படகை விடுவிக்க மறுத்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் விசைப்படகை உடனடியாக மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர் நாராயணசாமி, தனது குடும்பத்தினருடன் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது நாராயணசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மீனவர் குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரே‌‌ஷ், மீனவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடித்த படகை விரைந்து மீட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மீனவர் நாராயணசாமி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story