மாநில எல்லைகள் மூடப்பட்டதால் ரூ.1 கோடி பூக்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்


மாநில எல்லைகள் மூடப்பட்டதால் ரூ.1 கோடி பூக்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 8:57 PM GMT)

மாநில எல்லைகள் மூடப்பட்டதால் ரூ.1 கோடி மதிப்புள்ள பூக்களை ஏரியில் விவசாயிகள் கொட்டிவிட்டு சென்றனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரங்களில் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக காடையாம்பட்டி வட்டாரத்தில் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, காருவள்ளி, டேனிஷ்பேட்டை, பொம்மியம்பட்டி, தளவாய்பட்டி, ஜோடுகுளி, கொங்குபட்டி, மூக்கனூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் சாமந்தி பூக்கள், சாந்தினி, வைலட், வொயிட் செண்டு மல்லி போன்ற பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்களை பூசாரிப்பட்டி மார்க்கெட், சேலம் தேர்முட்டி பூ மார்க்கெட் மற்றும் விவசாயிகள் சிலர் ஒன்றாக சேர்ந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.

ரூ.1 கோடி மதிப்பு

இந்தநிலையில் யுகாதி பண்டிகையையொட்டி காடையாம்பட்டி, சந்தைபேட்டை, டேனிஷ்பேட்டை பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து 7 லாரிகளில் 10 டன் சாமந்தி பூக்களை பெங்களூருவுக்கு நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் விவசாயிகள் பூக்களை கொண்டு சென்ற 7 லாரிகளையும் தடுத்து நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக விவசாயிகள் அத்திப்பள்ளி ஏரியில் 10 டன் பூக்களை கொட்டி விட்டு வந்தனர்.

இதேபோல் பூசாரிப்பட்டி மார்க்கெட் மற்றும் தொப்பூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளிடம் விற்க பூக்களை விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால் வியாபாரிகள் வராததால் ஜோடுகுளி ஏரி, தளவாய்பட்டி ஏரி, கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரி ஆகிய ஏரிகளில் 20 டன் பூக்களை விவசாயிகள் கொட்டி விட்டு சென்றனர். நேற்று ஒரே நாளில் 30 டன் பூக்களை விவசாயிகள் ஏரியில் கொட்டினார்கள். இந்த பூக்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது தொடர்பாக விவசாயிகள் கூறும் போது, அத்தியாவாசிய பொருட்கள், விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில், எல்லையில் பூக்களை கொண்டு சென்ற லாரிகளை தடுத்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Next Story