மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை ‘அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்’ - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பேட்டி


மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை ‘அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்’ - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பேட்டி
x
தினத்தந்தி 24 March 2020 9:45 PM GMT (Updated: 25 March 2020 2:57 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்; மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை கலெக்டர் அண்ணாதுரை, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கு வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு பிறரையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்காக தவிர மற்ற நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விழுப்புரம் வந்துள்ள 139 பேர் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 26 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு பணி முடிந்து விட்டது. அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மீதமுள்ள 113 பேரும் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தங்கள் விவரங்களை தெரிவித்துவிட்டு அவரவர் வீடுகளிலேயே இருந்து சமுதாய பாதுகாப்பை உறுதி செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும். அதுபோல் மருத்துவமனைகள், மருந்தகங்களும் திறக்கப்பட்டிருக்கும். வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் தேவையான சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளோர் செல்வதற்கு வாய்ப்பின்றி இருந்தால் சமுதாயக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 2 பேருக்கு பரிசோதனை எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. இவர்களும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்று அறிக்கை வந்துள்ளது.

காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நிச்சயம் தடையின்றி கிடைக்கும். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அம்மா உணவகமும் செயல்படும்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்கள் மூலம் வரும் புகார்களை கண்காணித்து சரிசெய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது நிச்சயம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 50 வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கை கழுவும் முறைகள், தனிநபர் சுகாதாரம் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர். ஆட்டோ ஒலிப்பெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் முக கவசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு இதுவரை 7,100 முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முக கவசங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முக கவசம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் 13 குழுக்கள் மூலமாக கிருமி நாசினி திரவத்தை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story