ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மூடல்; வீடுகளில் தொழுகை நடத்த வேண்டுகோள் - ஐக்கிய ஜமாத் அறிவிப்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மூடல்; வீடுகளில் தொழுகை நடத்த வேண்டுகோள் - ஐக்கிய ஜமாத் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 9:15 PM GMT (Updated: 25 March 2020 8:33 PM GMT)

மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டு முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை நடத்த வேண்டுகோள் விடுத்து ஐக்கிய ஜமாத் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் ஜெய்னுல் ஆலம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகம் முழுவதும் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் மதித்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலமும் சமூக இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

மத்திய-மாநில அரசுகளின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல் அதன் அவசியத்தை உணர்ந்து நமது வாழ்க்கை மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை தற்காலிகமாக மாற்றிஅமைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பள்ளிவாசல்களில் ஐந்து நேர தொழுகைக்கு பாங்கு எனும் அழைப்பு கூறப்படும். பள்ளிவாசலில் பணியாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அங்கேயே தொழுகையை முடித்துக்கொள்வார்கள். மற்ற அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐந்து நேர தொழுகைகளை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மட்டும் பூர்த்தி செய்துகொண்டு மற்ற அனைவரும் கண்டிப்பாக வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய நலன், நாட்டு நலன் இவைகளை கருத்தில் கொண்டு ஜமாத்துல் உலமா சபை மற்றும் மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளின் அறிவுறுத்தலின்படி ஐக்கிய ஜமாத் இந்த வேண்டுகோளை மக்களுக்கு முன்வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய ஜமாத் அறிவிப்பின் காரணமாக மாவட்டத்தில் உள்ள 288 ஜமாத்களுக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.

Next Story