பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி


பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பு உள்ளது - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 26 March 2020 12:13 AM GMT (Updated: 26 March 2020 12:13 AM GMT)

மராட்டியத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை, 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் 120-க்கும் மேற்பட்டோர் இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடிபட்வா தினத்தில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடி காலத்தில் அரசு தங்களுக்கு பின்னால் உறுதியாக நிற்கிறது என்பதை ஏழை மற்றும் தினக்கூலிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மராட்டியத்தில் அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கவும், முககவசங்களை தயாரிக்கவும் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

தொழில் அதிபர்கள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களை குறைக்கவோ அல்லது அவர்களின் சேவைகளை நிறுத்தவோ கூடாது என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். சந்தைகளுக்கு கூட்டமாக திரண்டு வர வேண்டாம். தங்கள் வீட்டின் அருகில் குறைந்த தூரத்தில் உள்ள சந்தைக்கு தனியாக சென்று பொருட்களை வாங்கிவரவும். மேலும் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும். இந்த போரில் வெற்றி பெற்று குடி பட்வாவை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாடுவோம்.

இந்த போரில் எதிரி நம்மை எப்படி தாக்குவான் என்பது நமக்கு தெரியாது. வைரஸ்தான் இங்கு நம்முடைய எதிரியாகும். நீங்கள் வெளியேறினால் எதிரிகள் உங்களை தாக்கி உங்கள் மூலம் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளது. நீங்கள் நிலைமையின் தீவிரத்தன்மையை புரிந்து கொள்வீர்கள் என்பதை நம்புகிறேன்.

வீட்டில் ஏர்கண்டீசனரை(ஏ.சி) பயன்படுத்த வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன். இதை பயன்படுத்துவதால் வீட்டிற்கு குளிர்ச்சி, ஈரப்பதம் நிலவும். இந்த வைரஸ் நீண்டநேரம் வாழ வழிசெய்யும். இதற்கு பதில் இயற்கையான காற்றோட்டத்தை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த நெருக்கடி நிலையில் நீங்கள்என்ன செய்கிறீர்கள் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, “நான் எனது வீட்டின் திருமதி முதல்-மந்திரியின் (மனைவி) பேச்சை கேட்கிறேன். நீங்களும் உங்கள் வீட்டு மந்திரியின் பேச்சை கேளுங்கள். இந்த நெருக்கடிக்கு மற்றொரு நல்ல பக்கமும் உள்ளது. நீங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

சிலர் புத்தகங்களைப் படித்தும், வீட்டிற்கு இருந்தபடி விளையாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். நாம் இழந்தவற்றை, இப்போது மீண்டும் பெற முடியும்” என்றார்.

Next Story