திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பூட்டப்பட்ட ரெயில் நிலையம் - பொதுமக்கள் ஒத்துழைப்பால் வெறிச்சோடியது


திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பூட்டப்பட்ட ரெயில் நிலையம் - பொதுமக்கள் ஒத்துழைப்பால் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 26 March 2020 10:30 PM GMT (Updated: 26 March 2020 10:38 PM GMT)

திருவள்ளூரில் கொரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்ததால், ரெயில்நிலையம் பூட்டப்பட்டது. பொதுமக்கள் ஒத்துழைப்பால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

திருவள்ளூர், 

உலக நாடுகளை அச்சுறுத்தி காட்டு தீ போல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் வேகமாக பரவிய வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நிலைமையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் மற்றும் தலா ரூ.1000, நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், கட்டிடத் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மத்திய,மாநில அரசுகளின் இந்த அறிவிப்பை ஏற்று பொது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக் குள் முடங்கி ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இதன் காரணமாக திருவள்ளூர் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பஜார் வீதி, சி.வி.நாயுடு சாலை, காமராஜர் சாலை, டோல்கேட் சாலை, செங்குன்றம் சாலை, காக்களூர் சாலை, ஊத்துக்கோட்டை சாலை, செங்குன்றம் சாலை, திருப்பதி நெடுஞ்சாலை, உழவர் சந்தை பகுதி போன்ற பகுதியில் உள்ள முக்கிய கடைகள் வணிக வளாகங்கள் மூடப்பட்டது.

மேலும் திருவள்ளூர் நகரில் வணிக வளாகங்கள்,திரையரங்குகள் போன்றவையும் மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவால் திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையம் மூடப்பட்டு நுழைவாயில் முன்பு இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு பூட்டு போட்டு பூட்டி வைத்தனர். இதன் காரணமாக திருவள்ளூர் ரெயில் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Next Story