செங்கத்தில், தடையை மீறியவர்களை தோப்புக்கரணம் போடவைத்த போலீசார்


செங்கத்தில், தடையை மீறியவர்களை தோப்புக்கரணம் போடவைத்த போலீசார்
x
தினத்தந்தி 26 March 2020 10:15 PM GMT (Updated: 27 March 2020 3:32 AM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அறிவித்த 144 தடை உத்தரவைமீறி இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தனர்.

செங்கம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் செங்கத்தில் நேற்று காலை 10 மணி வரை அத்தியாவசிய தேவை என்ற பெயரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பழைய பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட், பழைய போலீஸ் நிலையத்தின் அருகே உள்ள மார்க்கெட், செங்கம் திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி வரை வழக்கம்போல மக்கள் நடமாட்டம் இருந்தது.

தடை உத்தரவையும் மீறி இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் 2 பேர், 3 பேராக சென்றுவருகிறார்கள். நேற்று வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் செங்கம் நகரம் மற்றும் செங்கத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, வெளியில் வரக்கூடாது எனவும் மீண்டும் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.

இதேபோல் செங்கம் பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் குறித்த எந்த அச்சமுமின்றி கிராமப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருவது செங்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் செங்கம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் வெளியில் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story