பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட தொடங்கியது - மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க நடவடிக்கை


பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக மார்க்கெட் செயல்பட தொடங்கியது - மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2020 10:15 PM GMT (Updated: 28 March 2020 8:03 PM GMT)

மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட் நேற்று செயல்பட தொடங்கியது.

நெல்லை, 

கொரோனா வைரஸ் பீதியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதே நேரத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைக்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

இதை தவிர்க்கும் பொருட்டு நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை, மேலப்பாளையம் உழவர் சந்தை ஆகியவையும் மூடப்பட்டன.

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் கடை நடத்திக் கொள்வதற்காக பாரதிநகர் போலீஸ் குடியிருப்பு மைதானம், நேருஜி கலையரங்க திடல், வ.உ.சி. மைதானம் ஆகிய 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இதில் ஒருசில வியாபாரிகள் போலீஸ் குடியிருப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் தற்காலிக மார்க்கெட் கடைகளை அமைத்தனர். அங்கு முதல் நாளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று 2-வது நாளிலும் பொதுமக்கள் அங்கு கூட்டம், கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

அதே நேரத்தில் வ.உ.சி. மைதானம், நேருஜி கலையரங்க திடலுக்கு வியாபாரிகள் செல்வதை தவிர்த்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று அதிகாலை வியாபாரிகள் கடைகளை அமைத்தனர். உடனடியாக அங்கு தற்காலிக மார்க்கெட் செயல்படத் தொடங்கியது. வியாபாரிகள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் கடைகளை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்தனர்.

பொதுமக்களும் ஒருவருக்கொருவர் தொடாமல் இடைவெளி விட்டு நின்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

இந்த தற்காலிக மார்க்கெட்டை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையடுத்து கலெக்டர் ஷில்பா, அந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மக்களை சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்புக்காக கைகளை கழுவும் திரவம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Next Story