உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு


உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 March 2020 4:07 AM GMT (Updated: 29 March 2020 4:07 AM GMT)

உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை சுந்தராபுரம், போத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இது தவிர கடைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களிலும் பலர் வேலை செய்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன. கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்படவில்லை. இதனால் அதில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் கடந்த 24-ந் தேதி முதல் வேலையில் லாமல் உள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் குடோன் போன்ற கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். தற்போது வேலையில்லாததாலும், சாப்பிட உணவு பொருட்கள் கிடைக்காததாலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று மதியம் கோவை போத்தனூர் காந்திநகர் பகுதியில் ஒன்று கூடினார்கள். ஒவ்வொருவரும் செல்போன் மூலம் தங்கள் நண்பர்களை அங்கு வருமாறு கூறினர். இதனால் சிறிது நேரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவை தெற்கு பகுதி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் செட்ரிக் இமானுவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கலைந்து செல்லுமாறு அங்கு திரண்டு இருந்தவர்களிடம் கூறினர். ஆனால் அவர்கள் தங்களுக்கு கடந்த 3 நாட்களாக சாப்பாடு கிடைக்கவில்லை. நாங்கள் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் செட்ரிக் இமானுவேல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒலி பெருக்கி வாயிலாக இந்தியில் பேசினார். அப்போது அவர் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி இருக்கிறீர்கள்? இது சட்டப்படி குற்றம். எனவே அனைவரும் உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று எச்சரித்தார்.

அதை அவர்கள் கேட்காமல் காந்தி நகரில் இருந்து போத்தனூருக்கு செல்லும் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் கலைந்து செல்லுமாறு அவர்களிடம் கூறினார்கள். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் கூட்டத்தினரை கலைக்க தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20 பேரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், மளிகை கடைகள் திறந்திருப்பதால் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மூலமும் உணவு வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் கூறினார்கள். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த தடியடியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story