மயிலம் அருகே, ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


மயிலம் அருகே, ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 31 March 2020 9:57 AM GMT (Updated: 31 March 2020 9:57 AM GMT)

மயிலம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சிவமூர்த்தி(வயது 13). அதேஊரில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் சிவமூர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் அதேபகுதியில் உள்ள தொண்டி ஆற்றுக்கு குளிக்க சென்றான். பின்னர் அவன் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென சிவமூர்த்தி தண்ணீரில் மூழ்கினான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உதவியுடன் சிவமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக செண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிவமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிவமூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story