நாகர்கோவிலில், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர் - வெளியூர் செல்ல அனுமதிகோரி விண்ணப்பம் கொடுத்தனர்


நாகர்கோவிலில், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர் - வெளியூர் செல்ல அனுமதிகோரி விண்ணப்பம் கொடுத்தனர்
x
தினத்தந்தி 1 April 2020 6:13 AM GMT (Updated: 1 April 2020 6:13 AM GMT)

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் வெளியூர் செல்வதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதையொட்டி ஒரு மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை பெற, சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் போலீஸ் கமிஷனர் மூலமும், பிற மாவட்டங்களில் கலெக்டர் மற்றும் துணை கலெக்டர் மூலமும் முறையாக அனுமதி கடிதம் பெற்று சென்றுவர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளி மாவட்டங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறவும், சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் விரும்பும் மக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திரண்டு மனு கொடுத்து வருகின்றனர்.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து விண்ணப்பம் அளித்தனர்.

இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் கீழ்தளத்தில் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவும், உறவினர்களை பார்ப்பதற்காகவும், சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு கார்களில் சென்றுவரவும் அனுமதிகோரி விண்ணப்பம் அளித்தனர்.

Next Story