மேலப்பாளையத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுடன் கலெக்டர் அவசர ஆலோசனை


மேலப்பாளையத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுடன் கலெக்டர் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 2 April 2020 10:45 PM GMT (Updated: 2 April 2020 7:24 PM GMT)

மேலப்பாளையத்தில் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுடன் கலெக்டர் ஷில்பா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

நெல்லை, 

கொரோனா வைரசால் சிலர் பாதிக்கப்பட்டதன் காரணமாக, நெல்லை மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த ஊருக்குள் செல்லும் சாலைகள் இரும்பு தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகளின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் காலையில் மட்டும் ஒரு சில இடங்களில் காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறந்து இருக்கின்றன. இதனால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மேலப்பாளையம் மண்டல அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு, முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகளிடம் அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறும்போது, ‘கொரோனா வைரஸ் தொற்று பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த பகுதியில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கொரோனா வைரசில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். நீங்கள் அரசுடன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

அதற்கு ஜாமத் நிர்வாகிகள், ‘பால், காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதை சரிசெய்ய வேண்டும். அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story