மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்


மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு; லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன் - போலீசில் சரண்
x
தினத்தந்தி 4 April 2020 11:45 PM GMT (Updated: 4 April 2020 9:46 PM GMT)

மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்த லாரி டிரைவரை வெட்டிக்கொன்ற மகன், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

திருவொற்றியூர், 

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி தையல் நாயகி (42). இவர்களுக்கு சேதுபதி (23), தமிழ்ச்செல்வன் (20) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகன் தமிழ்ச்செல்வன், சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

நாகராஜ், 2016-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக தனது 80 வயது தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜ், மேலும் குடிக்க பணம் கேட்டு தன்னுடைய மனைவியிடம் கத்தியை காட்டி தகராறு செய்தார்.

இதை கண்ட இளையமகன் தமிழ்ச்செல்வன், தனது தந்தையை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மகன் என்றும் பாராமல் கத்தியால் அவரது கையில் வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை தடுத்த தையல்நாயகிக்கும் காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த மூத்த மகன் சேதுபதி, ஆத்திரத்தில் தந்தையின் கையில் இருந்த கத்தியை பறித்து, நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் சேதுபதி, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சொத்துக்காக தனது தாத்தாவையே வெட்டிக்கொலை செய்த நாகராஜை, தற்போது அவரது மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story