நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் விபரீதம்: தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2020 11:15 PM GMT (Updated: 8 April 2020 7:10 PM GMT)

தூத்துக்குடியில் நகை கொள்ளை போனதாக மனைவி நாடகமாடியதால் தூத்துக்குடி துறைமுக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி பெரியசெல்வம்நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 59). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜான்சிராணி. கடந்த 3-ந்தேதி அதிகாலையில் ஜான்சிராணி, வீட்டில் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்று விட்டதாக தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜான்சிராணி நகையை மறைத்து வைத்து விட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சிராணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அவரிடம் இருந்து 93 பவுன் நகையையும் மீட்டனர்.

இதனால் வின்சென்ட் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நேற்று காலையில் வின்சென்ட் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வின்சென்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story