நெல்லை அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது


நெல்லை அருகே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2020 11:00 PM GMT (Updated: 9 April 2020 6:48 PM GMT)

நெல்லை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் அருகே உள்ள சன்னது புதுக்குடியை பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டு இருந்தனர்.

அங்கு போலீசார் சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் கலைந்து ஓடினார்கள். அங்கு நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

அங்கு இருந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர். அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த பால்மாரி (வயது 23), சன்னது புதுக்குடியை சேர்ந்த முருகன் (50), அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (56), நாராயணசாமி (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன், கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story