நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்


நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 13 April 2020 10:15 PM GMT (Updated: 13 April 2020 7:25 PM GMT)

நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது.

நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது.

மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 1- ந் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாளைக்கு 100 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனால் நிவாரண உதவி ரூ.1,000 வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினார்கள்.

கூட்டம் அலை மோதியது

அப்போது ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லையில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. பல கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க செய்தார்கள். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story