கடையம் அருகே, செல்போன் கடை, வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கடையம் அருகே, செல்போன் கடை, வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 April 2020 10:45 PM GMT (Updated: 20 April 2020 7:47 PM GMT)

கடையம் அருகே செல்போன் கடை, வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடையம், 

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் மங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 46). இவர், பொட்டல்புதூர் மெயின் ரோட்டில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் கடை திறக்கவில்லை. சம்பவத்தன்று இரவில் மர்மநபர்கள் அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், தட்சணாமூர்த்தி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த 4 செல்போன்கள், பீடி, சிகரெட் உள்ளிட்ட ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

பொட்டல்புதூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (44). இவருடைய வீட்டு மாடி வழியாக உள்ளே புகுந்த மர்மநபர், அங்கிருந்த பீரோவை திறந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியே செல்ல முயன்றார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து, திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தப்பியோடி விட்டார்.

பொட்டல்புதூரில் மட்டன் கடை நடத்தி வரும் அப்துல் ரகுமான் (34) என்பவர் தன்னுடைய வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது அதில் இருந்த பெட்ரோலை மர்மநபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இந்த 3 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் கடை மற்றும் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story