உத்திரமேரூர் அருகே, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


உத்திரமேரூர் அருகே, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 April 2020 10:30 PM GMT (Updated: 21 April 2020 9:58 PM GMT)

உத்திரமேரூர் அருகே அரும்புலியூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாலாஜாபாத், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் விவசாயம் சார்ந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரும்புலியூரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தின் மூலமாக 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

தேதி நீட்டிப்பு

தற்போது வரை 21,898 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற மே 30-ந் தேதி வரை நீட்டித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் கடந்தாண்டு காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டதும், தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 36 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

கூடுதல் கொள்முதல்

இதேபோல் கடந்த ஆண்டு கொள்முதலான 24, 728 மெட்ரிக் டன்னை காஞ்சீபுரம் மாவட்டம் மட்டுமே தற்போது நெருங்கி விட்டதாகவும், இன்னும் 12,048 மெட்ரிக் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் 50 சதவீதம் கூடுதலாகவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும் விவசாய கொள்முதல் நிலையங்களின் தினசரி 800 மூட்டைகள் வாங்கி கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வி.செந்தில்குமார், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி, துணை மண்டல மேலாளர் அருள்வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story