அனுமதி இல்லாமல் விற்பனை: திண்டுக்கல்லில் 600 கிலோ இறைச்சி பறிமுதல்


அனுமதி இல்லாமல் விற்பனை: திண்டுக்கல்லில் 600 கிலோ இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2020 1:22 AM GMT (Updated: 27 April 2020 1:22 AM GMT)

திண்டுக்கல்லில் அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைத்து இருந்த 600 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சியில் இறைச்சி கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி நூற்றாண்டு பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய 3 இடங்களில் தற்காலிக இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் புதன், ஞாயிறு ஆகிய நாட்களில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்ய வேண்டும்.

இதற்காக மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இடத்தில் தான் ஆடுகளை அறுக்க வேண்டும். அதை மீறினால் இறைச்சி வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் வழக்கமான இறைச்சி கடைகளையும் திறக்க அனுமதி இல்லை. இதனால் தற்காலிக இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

வீடுகளில் அறுத்து விற்பனை

இதை பயன்படுத்தி கொண்டு சிலர் வீடுகளில் மாடு, ஆடு, கோழிகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி நடராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திண்டுக்கல் நகர் முழுவதும் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். மேட்டுப்பட்டி, மேற்கு மரியநாதபுரம், நத்தம் சாலை, சிலுவத்தூர் சாலை, பழனி சாலை உள்பட பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது 5 பகுதிகளில் வீடுகளில் வைத்து மாடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதிலும் ஓரிடத்தில் கன்று குட்டிகளை இறைச்சிக்காக அறுத்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 550 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். அதேபோல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அருகே சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 50 கிலோ ஆட்டு இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த இறைச்சியை ரசாயனம் கலந்து அழித்தனர்.


Next Story