மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 27 April 2020 10:35 PM GMT (Updated: 27 April 2020 10:35 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர்.

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வேடிப்பிள்ளை. இவர்களுக்கு 2 வயதில் தில்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று காலை தில்ஷன், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் ரித்தினுடன்(6), அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது சிறுவர்கள் 2 பேரும் குட்டைக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தில்ஷனும், ரித்தினும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவர்கள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story