பூச்செடியை சேதப்படுத்திய பெண் மீது தாக்குதல் கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது


பூச்செடியை சேதப்படுத்திய பெண் மீது தாக்குதல் கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2020 2:11 AM GMT (Updated: 28 April 2020 2:11 AM GMT)

வில்லியனூர் அருகே பூச்செடியை சேதப்படுத்திய தகராறில் பெண்ணை தாக்கிய கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே சேந்தநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 24). இவரது பக்கத்து வீட்டில் உறவினர் சுப்பிரமணி வசித்து வருகிறார். இவர்கள் இருவரது வீட்டின் இடைவெளியில் பொதுவான இடம் உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரமணி பூச்செடிகள் வைத்து வளர்த்து வந்தார்.

இந்த செடிகளுக்கு சுப்பிரமணி குடும்பத்தினர் தினமும் தண்ணீர் ஊற்றி வந்தனர். இந்த தண்ணீர் காந்திமதி வீட்டின் சுவரில் பாய்ந்து, ஈர கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அந்த செடிகளை அகற்றுமாறு காந்திமதி கூறி வந்தார். ஆனால் சுப்பிரமணியின் குடும்பத்தினர் பூச்செடிகளை அகற்றவில்லையாம்.

4 பேர் கைது

சம்பவத்தன்று காந்திமதி அந்த பூச்செடிகளை அகற்றி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, அவரது மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன்கள் சிவா, சிலம்பரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து காந்திமதியை திட்டி, தாக்கினர். இதில் பலத்த காமடைந்த அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, அவரது மனைவி தமிழ்செல்வி உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.


Next Story