விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் திணறும் விவசாயிகள் தக்காளிகளை உரமாக்கும் அவலம்


விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் திணறும் விவசாயிகள் தக்காளிகளை உரமாக்கும் அவலம்
x
தினத்தந்தி 29 April 2020 2:01 AM GMT (Updated: 29 April 2020 2:01 AM GMT)

கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள். மேலும், தக்காளிகளை வாங்க வியாபாரிகள் வராததால் உரமாக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆலாந்துறை உள்பட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் தக்காளி, முட்டைகோஸ், சின்ன வெங்காயம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். நரசீபுரம் அருகே 8 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருபவர் ரஞ்சித். இவர் 2 ஏக்கரில் தக்காளியும், 2 ஏக்கரில் காளிபிளவரும், இதர ஏக்கரில் வாழையும் பயிரிட்டிருந்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவால் பூலுவபட்டி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், தனித்தனியாக வாங்கி விற்று வந்தவர்களும் வாங்குவதை நிறுத்தி விட்டதால், விளைந்த தக்காளியை வாழைக்கு உரமாக கொட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தக்காளி செடியிலேயே பழுத்து, அழுகி வருவதாகவும் கூறினார்.

சந்தைப்படுத்த முடியவில்லை

மேலும், இதுகுறித்து விவசாயி ரஞ்சித் கூறியதாவது:- ஊரடங்கு உத்தரவால் பயிரிடப்பட்டுள்ள விளைபொருட்களை விற்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். இந்தநிலையில் பயிரிட்ட தக்காளியை பறித்து கொடுக்க தயாராக உள்ளோம். அதை தங்களிடமிருந்து உரிய விலைக்கு தமிழக அரசு வாங்கி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல காலிபிளவர் பயிரிட்டுள்ளேன். அதுவும் பறிக்கும் நிலைக்கு வந்த போதிலும் வியாபாரிகள் இல்லாததால் அப்படியே செடியோடு தோட்டத்திலேயே விட்டு விட்டேன். சந்தைப்படுத்த முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு விவசாயிகள் உள்ளாகியுள்ளனர்.

தக்காளி 2 ஏக்கரில் பயிரிட ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்தேன். தற்போது சந்தைப்படுத்த முடியாததால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விளைந்துள்ள 2 ஆயிரம் கிலோ தக்காளியை பறித்தாலும், கூலிக்கே சரியாக இருக்கும். செடியிலேயே அழுகிப்போன 500 கிலோ தக்காளியை பறித்து வேறு வழியில்லாமல் வாழைக்கு உரமாக்கியுள்ளேன்.

வாழை இலை

40 நாட்களான நிலையில் வாழை இலையை பறிக்காமல் விட்டுள்ளேன். இதனால் மாதத்திற்கு லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளது. வாழை இலை, தக்காளி, காலிபிளவர் பயிரிட்ட நான் மட்டும் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி நஷ்டம் அடைந்துள்ளேன். இவ்வாறு பல விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் காய்கறிகளை பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது.விவசாயிகள் விளைவித்த பொருளை பறித்து அரசிடம் தருவதாகவும், அதை அவர்கள் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் கடனிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.


Next Story