மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானை தர்பூசணி கடையை சேதப்படுத்தியது


மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானை தர்பூசணி கடையை சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 29 April 2020 2:12 AM GMT (Updated: 29 April 2020 2:12 AM GMT)

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்த காட்டு யானை ஒன்று தர்பூசணி கடையை சேதப்படுத்தியது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் காட்டுயானைகள் வனப்பகுதியையொட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

சில நேரங்களில் மனிதர்களையும், காட்டு யானைகள் தாக்குகின்றன. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டை கடந்து கல்லார் வனப்பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

தர்பூசணி பழங்களை தின்றது

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் உலா வந்தது. அப்போது சாலையோரம் ஒரு கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களின் வாசனையை நுகர்ந்த காட்டு யானை அங்கு வந்தது.

அதை பார்த்ததும், கடையிலிருந்து தர்ப்பூசணி பழங்களை வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்த தொழிலாளர்களும், அங்கிருந்த பொதுமக்களும் அலறியடித்தப்படி, தலைதெறிக்க ஓடினார்கள்.

பின்னர் அந்த காட்டு யானை தர்பூசணி பழங்களை ஆசைதீர தின்றது. மேலும் கடையையும் சேதப்படுத்தியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் காட்டு யானையை பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

இதனால் காட்டு யானை அங்குள்ள மரக்கடை வழியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story