நீலகிரி மாவட்டத்தில் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரம்


நீலகிரி மாவட்டத்தில் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 29 April 2020 11:24 PM GMT (Updated: 29 April 2020 11:24 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 13 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவவுதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், எருமாடு, நம்பியார்குன்னு, கக்கனல்லா, முள்ளி உள்பட மொத்தம் 13 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பெரும்பாலான சோதனைச்சாவடிகள் கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளையொட்டி அமைந்து உள்ளது.

பர்லியார், குஞ்சப்பனை ஆகிய 2 சோதனைச்சாவடிகள் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலையில் உள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை நீலகிரிக்கு கொண்டு வரும் சரக்கு வாகனங்கள், லாரிகளை தடுத்து நிறுத்தி தீவிரமாக சோதனை செய்கின்றனர். இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மருத்துவ பரிசோதனை

சோதனைச்சாவடிகள் வழியாக வரும் சரக்கு வாகனங்களுக்குள் அத்தியாவசிய பொருட்கள்தான் இருக்கிறதா? என உறுதி செய்து, அதற்கான ரசீது விவரம் சரிபார்க்கப்படுகிறது. மேலும் டிரைவர், கிளனர் பெயர்களை பதிவேட்டில் குறிப்பிட்டு, செல்போன் எண்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

சரக்கு வாகனங்களில் இ-பாஸ் வாங்கி சென்றாலும், அவர்கள் தங்களை தாங்களே 28 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது. இ-பாஸ் பெறாமல் செல்பவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. புகையிலை பொருட்கள், மதுபானங்கள் கடத்தி செல்லப்படுகிறதா எனவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் தினமும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story