கொடைக்கானலுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் 3 பேர் கைது


கொடைக்கானலுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2020 11:51 PM GMT (Updated: 30 April 2020 11:51 PM GMT)

கொடைக்கானலுக்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல்,

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடைக்கானலுக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வருவாய்த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. சிவக்குமார் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். அந்த லாரியில் மாட்டுதீவனம் உள்ளதாக டிரைவர் கூறினார். இதில் சந்தேகமடைந்த போலீசார் உடனே லாரியை சோதனை செய்தனர். அதில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்வது தெரியவந்தது.

3 பேர் கைது

இதேபோல் மற்றொரு மினிலாரியில் காய்கறி அவசரம் என்ற அனுமதி சீட்டு ஒட்டப்பட்டு, சிமெண்டு மூட்டைகள் ஏற்றி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த ஜெபக்குமார் (வயது 62), பூம்பாறை கிராமத்தை சேர்ந்த கார்த்தி (23) உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, கட்டுமான பொருட்கள் எதற்காக கொண்டு வரப்படுகிறது. எங்கு கட்டிட பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனர். 

Next Story