போதிய விலை கிடைக்காததால் விரக்தி: தேயிலை செடிகளில் இலைகளை வெட்டி வீசும் விவசாயிகள்


போதிய விலை கிடைக்காததால் விரக்தி: தேயிலை செடிகளில் இலைகளை வெட்டி வீசும் விவசாயிகள்
x
தினத்தந்தி 1 May 2020 11:07 PM GMT (Updated: 1 May 2020 11:07 PM GMT)

போதிய விலை கிடைக்காத விரக்தியில் தேயிலை செடிகளில் இலைகளை விவசாயிகள் வெட்டி வீசி வருகின்றனர்.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கிய பொருளாதாரமாக உள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 60 ஆயிரம் பேர் உள்ளனர். தேயிலை விவசாயத்தை நம்பி பல தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் சில தனியார் தேயிலை தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏற்கனவே தேக்கம் அடைந்து உள்ளது.

போதிய விலை கிடைக்கவில்லை

இதனால் விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை மிகவும் குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.10 விலை கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் பச்சை தேயிலை பறிப்பதற்காக தொழிலாளர்களுக்கு சம்பளம், அதை ஏற்றி செல்ல வாடகைக்கு வாகன கூலி மற்றும் பராமரிப்பு செலவுக்கே திணறி வருகிறார்கள். பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், ஊட்டி அருகே மஞ்சக்கொம்பை கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பச்சை தேயிலையை பறிக்காமல் விவசாயிகள் விட்டு இருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், தேயிலை தோட்டங்கள் அப்படியே விடப்பட்டது. தற்போது பறிக்காமல் விட்டதால் பச்சை தேயிலை முற்றி செடிகள் மரங்களாக வளர்ந்து வருகின்றன. இதனால் பச்சை தேயிலை பறிக்காமல் வீணாக தோட்டங்களில் வெட்டி வீசப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வாங்கி கடனை அடைக்க முடியவில்லை

பச்சை தேயிலையை 10 நாட்களுக்கு ஒரு முறை பறிக்க வேண்டும். அவ்வாறு பறிக்கவில்லை என்றால், இலை முற்றி பறிக்க முடியாமல் போய் விடும். ஏப்ரல், மே மாதங்களில் பச்சை தேயிலை அதிகமாக மகசூல் கிடைக்கும். ஊரடங்கு உத்தரவால் பறிக்காமல் விட்டு இருந்தோம். இதே நிலை நீடித்தால் தேயிலை செடி மரமாக வளர்ந்து விடும். தேயிலை தொழிற்சாலைகள் நிர்ணயிக்கும் விலையை விவசாயிகளுக்கு வழங்குவது இல்லை. இதனால் போதிய விலை கிடைக்காததால் செடிகளில் இலைகளை வெட்டி வீசுகிறோம். கவாத்து செய்யப்பட்டாலும் மீண்டும் இயல்பு நிலை திரும்பினால்தான் பார்க்கலாம். வங்கிகளில் தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story