ஊரடங்கால் அறுவடை செய்ய முடியவில்லை: மரத்திலேயே காய்த்து தொங்கும் பலாப்பழம்


ஊரடங்கால் அறுவடை செய்ய முடியவில்லை: மரத்திலேயே காய்த்து தொங்கும் பலாப்பழம்
x
தினத்தந்தி 2 May 2020 3:43 AM GMT (Updated: 2 May 2020 3:43 AM GMT)

புதுச்சேரி பகுதியில் ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய முடியாததால் மரத்திலேயே பலாப்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புதுச்சேரி,

மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழம். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும். பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டி பலாவிற்கு என்று மார்க்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்கு காரணம் அதன் அலாதியான சுவை. இதேபோல் புதுச்சேரி பலாவுக்கும் தனி சிறப்பு உள்ளது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.

பலாப்பழத்தின் மேல்தோல் கரடு முரடாக காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் சுளைகள் தித்திக்கும் தேன் சுவையோடு இருப்பதால் மற்ற பழங்களை காட்டிலும் இதற்கு மவுசு அதிகம். ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் பாங்கான பூமியான புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பலா பயிரிடப்பட்டு உள்ளது. ஆங்காங்கே உள்ள தோட்டங்களில் காய்த்து தொங்கும் பலாப் பழங்களை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் பார்த்து பரவசமடைகின்றனர்.

அறுவடை பாதிப்பு

ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். இந்த சீசன் காலத்தில் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பலாப்பழம் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு பலாப்பழம் அதன் தரத்துக்கு ஏற்ப 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவத்தொடங்கியது. வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பலாப்பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக வாகனங்களில் ஏற்றப்பட்ட பலாப் பழங்கள் புதுச்சேரி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நஷ்டம்

இது குறித்து பலாப்பழ விவசாயி ஒருவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் பலாப் பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. அதையும் மீறி சில இடங் களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளிமாநிலங் களுக்கு கொண்டு செல்ல முடியாததால் இங்கேயே விற்பனை செய்கிறோம். விற்பனை மந்தமாக உள்ளதால், மேற்கொண்டு, அறுவடை செய்யாமல் விட்டுவிட்டோம். இதனால் மரத்திலேயே பழங்கள் தொங்குகின்றன. இந்த ஆண்டு பலாப்பழம் செழிப்பாக வளர்ந்தும், விற்பனை செய்ய முடியாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

Next Story