டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனை: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மருந்து கடைகளுக்கு ‘சீல்’


டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை விற்பனை: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 மருந்து கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 2 May 2020 11:13 PM GMT (Updated: 2 May 2020 11:13 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரை விற்ற 11 மருந்து கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திண்டுக்கல்,

ஊரடங்கு உத்தரவால் அரிசி, மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் முறைகேடாக மருந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து கடைகளை ஆய்வு செய்யும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதன்பேரில் மருந்து ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

11 கடைகளுக்கு ‘சீல்’

அப்போது சில மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்றது, அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்தை முறைகேடாக விற்றது தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கும்பலாக நின்று மருந்துகள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறியதாக பழனியில் 7 மருந்து கடைகள், செம்பட்டியில் 2 மருந்து கடைகள் மற்றும் வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தலா ஒரு மருந்து கடை என மாவட்டம் முழுவதும் 11 மருந்து கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். எனவே, மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரை விற்க கூடாது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மயக்க மருந்துகளை டாக்டரை தவிர்த்து மற்றவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும், என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் செயல் பட்ட ஹெல்மெட் கடையை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கவேல் மற்றும் போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்தனர். பழனி சாலையில் பேக்கரியில் டீ விற்பதாக புகார் வந்தது. அதன்பேரில் துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பேக்கரிக்கு ‘சீல்’ வைத்தனர். 

Next Story