ஊரடங்கால் மாற்றுத்தொழிலுக்கு மாறிய ஆட்டோ டிரைவர்கள்


ஊரடங்கால் மாற்றுத்தொழிலுக்கு மாறிய ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 2 May 2020 11:50 PM GMT (Updated: 2 May 2020 11:50 PM GMT)

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர்கள் மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்துக்கு வருவாய் கொழிக்கும் துறையாக சுற்றுலா மற்றும் கலால் துறைகள் உள்ளன. இதில் சுற்றுலாவை நம்பி ஆயிரக்கணக் கான ஆட்டோக்கள் புதுவை நகர பகுதியில் ஓடுகின்றன. வெளியூர்களில் இருந்து புதுவைக்கு ரெயில், பஸ் மூலம் வரும் சுற்றுலா பயணிகளை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து செல்வதில் ஆட்டோக்களின் பங்கு அதிகமாகும்.

இதேபோல் தங்கும் விடுதிகளில் இருந்து கடற்கரை, அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், தூய இருதய ஆண்டவர் ஆலயம், தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கும் ஆட்டோ மூலம் அவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். உள்ளூரில் வசிப்பவர்கள் மருத்துவமனை, சினிமா தியேட்டர், ஜவுளி கடை, மார்க்கெட், வங்கிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களுக்கு செல்ல பஸ் சேவை சரியாக இல்லை.

எனவே மேற்கண்ட இடங்களுக்கு செல்ல ஆட்டோக்களையே பொதுமக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல ரூ.60 முதல் ரூ.100 வரை கட்டணமாக வாங்கி வந்தனர். இதனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

பூ வியாபாரம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்துக்கும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்திய நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர் கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைக்கு செல்லாததால், வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக பலர் மாற்று வேலை செய்து பிழைப்பு நடத்துகின்றனர்.

குறிப்பாக காய்கறி, பூ, தின்பண்டங்கள் போன்றவற்றை வியாபாரிகளிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்கின்றனர். காலை நேரத்தில் மக்கள் கூடும் இடங்களில் அவற்றை விற்கின்றனர். இதன்மூலம் கிடைக்கும் குறைந்த தொகையைக்கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது.

Next Story