தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை எரித்துக்கொன்ற கணவர்; தானும் தீக்காயம் அடைந்தார்


தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை எரித்துக்கொன்ற கணவர்; தானும் தீக்காயம் அடைந்தார்
x
தினத்தந்தி 3 May 2020 11:45 PM GMT (Updated: 4 May 2020 12:20 AM GMT)

காரைக்குடியில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டிய மனைவியின் மீது அவரது கணவர் தீவைத்து எரித்துக்கொன்றார். இந்த சம்பவத்தில் அவரும் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குறிச்சிப்புரவு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 36). இவர் கல்லூரி சாலையில் வாகனங்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி சுகந்தி (33). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது சுகந்தி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு, தான் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கணவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது செந்தில் ஆத்திரம் அடைந்து, தற்கொலை மிரட்டல் விடுத்த தன் மனைவி மீது தீ வைத்ததாக தெரிகிறது.

இதனால் சுகந்தி உயிரோடு கொளுத்தப்பட்டார். பின்னர் செந்தில் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரும் உடல் கருகி தீக்காயம் அடைந்தார்.

இதற்கிடையே இவர்கள் இருவரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். சுகந்தி, செந்தில் மீது எரிந்த தீயை அணைத்தனர். மேலும் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய சுகந்தி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இறப்பதற்கு முன் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய கணவர் செந்தில் மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செந்தில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story