கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் பிரபாகர் தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 4 May 2020 11:30 PM GMT (Updated: 4 May 2020 8:09 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளவேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளவேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, தமிழக முதல்-அமைச்சரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் வருகிற 17-ந் தேதி நள்ளிரவு வரை சில நிபந்தனைகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை. செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ள தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) நகை மற்றும் துணி விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்) இயங்க அனுமதியில்லை.

டீக்கடைகள், லாட்ஜ்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவை இயங்க அனுமதி இல்லை. சுய தொழில் புரியும் பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக்குகள், தச்சர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று பணி செய்யலாம். அனைத்து பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும், சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story