6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்


6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்
x
தினத்தந்தி 5 May 2020 10:30 PM GMT (Updated: 5 May 2020 8:52 PM GMT)

திம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் சிக்கிய 6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

நாமகிரிப்பேட்டை, 

நாமக்கல் மாவட்டம், திம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் 2 சரக்கு லாரிகள், காரில் வந்த 22 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை முடிவில், காரில் வந்த 4 பேருக்கும் மற்றும் லாரிகளில் வந்த 12 தொழிலாளர் களுக்கும் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து நேற்று அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் லாரியில் வந்தவர்களில் மீதமுள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 5 தொழிலாளர்கள் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று திம்மநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

அப்போது நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு முட்டை லோடு ஏற்றிச்சென்று லோடை இறக்கி விட்டு லாரி ஒன்று திரும்பி வந்தது. அந்த லாரியில் வந்த நாமக்கல் பகுதியை சேர்ந்த 7 தொழிலாளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் 7 பேரும் திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை முடிவை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story