முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்: சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை


முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்: சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 5 May 2020 10:17 PM GMT (Updated: 5 May 2020 10:17 PM GMT)

முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர், 

முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக இடைவெளி

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு தளர்வில் அறிவிக்கப்பட்டுள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொருள் வாங்கும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல் வேண்டும். முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு கடையின் உரிமையாளர்கள் பொருட்களை வழங்கக்கூடாது.

முக கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும். வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்ச்சியாக நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

3 வண்ண அட்டை

தற்போது நடைமுறையில் உள்ள 3 வண்ண அனுமதி அட்டை திட்டம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை வைத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற வெளியில் வரவேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 நாட்களில் மட்டுமே வெளியில் வரவேண்டும்.

144 ஊரடங்கு தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளதால் அதனை மீறுவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளவரை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story