முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு


முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்: வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 May 2020 3:27 AM GMT (Updated: 6 May 2020 3:27 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு அறிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கடைபிடிக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் திருவண்ணாமலை, ஆரணியில் இருந்து சித்தூர், காட்பாடி, குடியாத்தம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் சாத்துமதுரை, அரியூர், மூலைகேட், கந்தனேரி வழியை இருவழி பாதையாக பயன்படுத்த வேண்டும். திருவண்ணாமலை, ஆரணியில் இருந்து சித்தூர், காட்பாடி, குடியாத்தம் செல்லும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் பாகாயம், டோல்கேட், புதிய மாநகராட்சி அலுவலகம், கோட்டை பின்புறம், பழைய பைபாஸ், கிரீன்சர்க்கிள், பாலாறு புதிய பாலம் வழியாக செல்ல வேண்டும்.

குறிப்பாக சி.எம்.சி. மருத்துவமனை, காகிதப்பட்டறை, பழைய பஸ் நிலையம் செல்பவர்கள் கோட்டை பின்புறம், பழைய பைபாஸ் சாலை வழியாக வந்து நேஷனல் சர்க்கிள் அருகே திரும்பி செல்ல வேண்டும்.

திருவண்ணாமலை

காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் பாலாறு பழைய பாலம், கிரீன்சர்க்கிள், பழைய பஸ்நிலையம், தொரப்பாடி, பாகாயம் வழியாக செல்ல வேண்டும். ஊரடங்கு முடியும்வரை வாகன ஓட்டிகள் 2-வது ரூட்டை (சி.எம்.சி. கண்மருத்துவமனை முதல் பாகாயம் வரை) பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். காரில் டிரைவரை தவிர 2 பேர் பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Next Story