வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நகை தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையின்றி முடக்கம்


வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நகை தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையின்றி முடக்கம்
x
தினத்தந்தி 6 May 2020 5:01 AM GMT (Updated: 6 May 2020 5:01 AM GMT)

ஊரடங்கு உத்தரவால் ஆரணியில் நகை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணி,

ஆரணி நகரிலும், சுற்று வட்டாரப் பகுதியிலும் நகை தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்தசில ஆண்டுகளாகவே நகை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர வேலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. காரணம்; பெரிய நகை வியாபார ஷோரூம்களில் ரெடிமேடு ரகங்கள் குவிக்கப்பட்டதால், அவர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

கிடைக்கும் ஒன்றிரண்டு வேலைகளும் கூட தற்போது ஊரடங்கு உத்தரவால் 41 நாட்களாக நகை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். அவர்களில் பாதி பேர் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை இன்று வரை வந்து சேரவில்லை.

நிவாரணம் வழங்க வேண்டும்

மேலும் சிலர் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வருகின்றனர். அங்கும், அவர்களுக்குப் போதிய வருவாய் இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். அதில் ஒருசிலர் கவுரவம் பார்க்காமல் அம்மா உணவகத்தில் 3 வேளை உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

அவர்கள் விலை உயர்ந்த நவீன எந்திரங்களை கொண்டு தங்கத்தைப் பட்டை தீட்டி வருகின்றனர். அந்த எந்திரங்களை வாங்க, வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடனை அடைக்க முடியாமலும், வீடு, கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். நகை தொழிலாளர்களுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story