கண்டராதித்தத்தில் மின்கசிவால் தீப்பற்றி 3 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து நாசம்


கண்டராதித்தத்தில் மின்கசிவால் தீப்பற்றி 3 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 6 May 2020 6:21 AM GMT (Updated: 6 May 2020 6:21 AM GMT)

வயலுக்கு அருகே செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து விழுந்தது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு கரும்பு பயிர் தீப்பற்றி எரிய தொடங்கியது.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவகுமார் (வயது 52), கைலாசம்(70), குமார்(37). இவர்கள் 3 பேரும் வில்வித்தை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையின் பக்க வாட்டில் அருகருகே உள்ள அவர்களது நிலத்தில் கரும்பு விவசாயம் சாகுபடி செய்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களின் வயலுக்கு அருகே செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து விழுந்தது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு கரும்பு பயிர் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அவ்வழியே சென்றவர் கள் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து அங்கு விரைந்து வந்த அப்பகுதி விவசாயிகள், கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 3 பேர் நிலத்திலும் சேர்த்து சுமார் 3 ஏக்கர் கரும்பு பயிர் எரிந்து நாசமானது. 

இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது திருமானூர் ஒன்றிய பகுதிகளில் அவ்வப்போது கரும்பு பயிர் மின் கசிவினால் தீப்பற்றி எரிந்து வருகிறது. மின்கம்பிகள் பழுதாகவோ அல்லது தாழ்ந்து இருப்பதையோ விவசாயிகள் பார்த்து, மின்வாரிய துறை யினருக்கு தகவல் அளித்தாலும், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப் பதில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மின் கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story