தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2020 11:00 PM GMT (Updated: 6 May 2020 8:21 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொண்டர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் வீடுகள் முன்பு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிவுறுத்தினார். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் நடந்த போராட்டத்திற்கு கட்சியின் அமைப்பு செயலாளர் கோவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயந்தி, செய்தி தொடர்பாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மதுக்கடைகள் திறப்பை தமிழக அரசு உடனடியாக கைவிடவேண்டும். மதுபான தயாரிப்பு தொழிற்சாலையை உடனே மூட வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் சமூக இடை வெளியுடன் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் மன்னன், நகர செயலாளர் ராமதுரை, நகர பொறுப்பாளர் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி, பொம்மிடி

நல்லம்பள்ளியை அடுத்த மாதேமங்கலம் கிராமத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மாரியப்பன், பொன்னம்மாள், மாரியம்மாள், சுஜாதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கைகளில் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மண்டல செயலாளர் நந்தன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கைகளில் பதாகை ஏந்தி மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பாலக்கோடு

பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை திறந்தால் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மதுக்கடையை திறக்க கூடாது என்று பெண்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனால் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story