முக கவசம் அணியாமல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் மதுபானம் வழங்கப்படாது போலீஸ் சூப்பிரண்டு தகவல்


முக கவசம் அணியாமல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் மதுபானம் வழங்கப்படாது போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 6 May 2020 11:55 PM GMT (Updated: 6 May 2020 11:55 PM GMT)

நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் மதுபானம் வழங்கப்படாது என போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் மதுபானம் வழங்கப்படாது என போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சோதனைச்சாவடி

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து நாகை மாவட்டத்திற்குள் வருவோர்களை தடுக்க மாவட்ட எல்லையான கானூர், ஏ.கே.சத்திரம், வாஞ்சூர் சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் போலீசாருடன் மருத்துவக்குழுவினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும். பாஸ் பெற்று வாகனங்களில் வந்தாலும் அவர்கள் முழுமையாக மருத்துவசோதனைக்கு பின்னரே நாகை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்த அழைத்து செல்லப்படுவார்கள்.

முக கவசம் கட்டாயம்

நாகை மாவட்டத்தில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள் தவிர மற்ற 97 கடைகளும் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படும். எந்த எந்த கடைகளில் கூட்டம் வரும், எந்த கடைகளில் அதிக அளவு விற்பனை ஆகும் என்பது குறித்த முழு விவரம் சேகரிக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இங்கு வருபவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வந்தால் மதுபானம் வழங்கப்படமாட்டாது. சமூக இடைவெளி பின்பற்றாத டாஸ்மாக்கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்படும். கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு கூட்டம் கூடுவது தடுக்கப்படும். எல்லா டாஸ்மாக் கடைகளுக்கும் கம்பு மற்றும் இரும்பு ஆகியவற்றிலான தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு சமூக இடைவெளியுடன் வரிசையில் விடப்படும். தேவைப்படும் கடைகளில் டோக்கன் வழங்கி ஒலிப்பெருக்கி வாயிலாக அழைப்பு விடுத்து மதுபானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினரை கொண்ட குழுவினர் காலை 8 மணி முதல் எல்லா கடைகளிலும் சென்று சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story