43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்படுவதால் மதுபிரியர்கள் உற்சாகம் குமரியில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறையில் விற்பனை


43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்படுவதால் மதுபிரியர்கள் உற்சாகம் குமரியில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறையில் விற்பனை
x
தினத்தந்தி 7 May 2020 1:29 AM GMT (Updated: 7 May 2020 1:29 AM GMT)

43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்படுவதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாகர்கோவில், 

43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்படுவதால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். குமரியில் கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படுகிறது.

மதுக்கடைகள்

நாடு முழுவதும் 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 43 நாட்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி சில நிபந்தனைகளுடன் தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட (சென்னையை தவிர) உள்ளன. இதையொட்டி மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பாக...

குமரி மாவட்டத்தில் மொத்தம் 111 மதுக்கடைகள் உள்ளன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கடைகளில் இருந்த மது பாட்டில்கள் பாதுகாப்பு கருதி இறச்சகுளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், செண்பகராமன்புதூரில் உள்ள குடோனிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மதுபாட்டில்களை அந்தந்த மதுக்கடைகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. மதுபானங்களை வாகனங்களில் ஏற்றி அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

முன்னெச்சரிக்கை

மேலும் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு நபருக்கும், இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடியாக இருக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது. அதோடு வரிசையில் நின்று வாங்குவதற்கு ஏற்ற வகையில் கம்புகள் கட்டப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மதுக்கடைகள் மட்டுமே செயல்படும். பார்கள் மூடப்பட்டு இருக்கும்.

‘சீல்‘ வைக்கப்பட்ட பகுதிகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் கடைகள் எதையும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிகட்டிபொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு மற்றும் செறுதிகோணம் ஆகிய பகுதிகள் தற்போது ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகளுக்குள் மதுக்கடைகள் எதுவும் இல்லை. எனவே குமரி மாவட்டத்தில் 111 மதுக்கடைகளும் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

100 பேருக்கு டோக்கன்

இதுபற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது “அரசின் உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் மதுக்கடைகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைகளிலும் 5 பேர் மட்டுமே வரிசையில் நின்று மதுபானம் வாங்க வேண்டும். இதற்காக தடுப்புகள் (பேரிகார்டு) அமைத்துள்ளோம்.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கி மதுபானம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது முதலில் 100 பேருக்கு டோக்கன் வழங்கப்படும். பின்னர் டோக்கன் அடிப்படையில் ஒவ்வொருவருக்காக மதுபானம் வழங்கப்படும்“ என்றார்.

சாத்தியமாகுமா?

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் 43 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. அந்த சமயத்தில், மதுவின்றி பரிதவித்த சிலர் போதைக்காக வார்னிஷ் குடித்து இறந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. மேலும், சிலர் கை, கால் நடுக்கத்துடனேயே அல்லோலப்பட்ட சம்பவமும் தொடர்ந்தது. இது ஒருபுறம் இருக்க, மதுக்கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது.

இதனால் ஊரடங்கில் சிலவற்றை தளர்வு செய்த போது, அதில் மதுக்கடையையும் சேர்த்து தமிழக அரசு அறிவித்தது. மதுக்கடைகள் இன்று திறக்கப்படுவதால், மதுபிரியர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. இதனால் மதுக்கடைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் காணப்படும். கூட்டத்தை சமாளிக்க அதிகாரிகள் டோக்கன் முறையை அமல்படுத்தினாலும், அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. மதுக்கடைகளில் கூட்டத்தை கூட்டி கொரோனாவை கொண்டு வராமல் இருந்தால் சரிதான் என்று தன்னுடைய கவலையையும் தெரிவிக்கிறார்கள்.

Next Story