தனிமைப்படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் ரேஷன் பொருட்கள் வீடு, வீடாக வினியோகம்


தனிமைப்படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் ரேஷன் பொருட்கள் வீடு, வீடாக வினியோகம்
x
தினத்தந்தி 7 May 2020 1:35 AM GMT (Updated: 7 May 2020 1:35 AM GMT)

குலசேகரம் அருகே தனிமைப்படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

குலசேகரம், 

குலசேகரம் அருகே தனிமைப்படுத்தப்பட்ட செறுதிக்கோணம் பகுதியில் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் நடமாடும் ஏ.டி.எம். செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நர்சுக்கு கொரோனா

குலசேகரம் அருகே செறுதிக்கோணம், முல்லைப்பள்ளிவிளை பகுதியை சேர்ந்த ஒரு நர்சுக்கு சென்னையில் லேப் டெக்னீசியன் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் சென்னைக்கு சென்று வேலையில் சேரும் போது கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் செறுதிக்கோணம் கிராமத்திற்கு சென்று நர்சின் நெருங்கிய உறவினர்களை தனிமை படுத்தினர். நர்சின் கணவர், அவருடைய 2 மாத குழந்தை உள்பட 12 பேரின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும், செறுதிக்கோணம் கிராமத்தை தனிமை படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

கண்காணிப்பு

செறுதிக்கோணத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்தனர். சுகாதார பணியாளர்கள் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

வீடு வீடாக சென்று யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளதா எனவும் கணக்கெடுத்தனர். செறுதிக்கோணம், முல்லைப்பள்ளிவிளை மற்றும் அதை சுற்றியுள்ள செக்குமூடு, புரவூர், அக்கம்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த 1,060 குடும்பத்தினரை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

ரேஷன் பொருட்கள்

நேற்று முன்தினம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான பால், காய்கறி, மளிகை பொருட்கள் வீடு வீடாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

செறுதிக்கோணம் பகுதியில் நேற்று குலசேகரம் பேரூராட்சி செயல்அலுவலர் ரெமாதேவி, பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமாரி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்தனர். இதற்காக இலவச அரிசி, சீனி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை வாகனங்களில் எடுத்து சென்று ஒவ்வொரு வீடாக சென்று ரேஷன் கார்டுகளை வாங்கி பதிவு செய்துவிட்டு பொருட்களை வழங்கினர். பொதுமக்கள் பணம் எடுக்க வசதியாக நடமாடும் ஏ.டி.எம். மையம் இயக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story