கோவை மாவட்டத்தில் 207 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது


கோவை மாவட்டத்தில் 207 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 7 May 2020 2:35 AM GMT (Updated: 7 May 2020 2:35 AM GMT)

கோவை மாவட்டத்தில் 207 டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதில் ஹோமம் வளர்த்து பூஜை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி டாஸ்மாக் கடைகள் இன்று(வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த கடைகளை திறக்க நேற்று தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன. கோவை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்களுடன் அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். மது பாட்டில்கள் வாங்குவதற்காக தகராறில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோவை வடக்கு கணபதி, கவுண்டம்பாளையம், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சரவணம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் 159 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கோவை தெற்கு பொள்ளாச்சி, வால்பாறை, காந்திபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், சூலூர், மலுமிச்சம்பட்டி, போத்தனூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 136 கடைகள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 207 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

ஹோமம் வளர்த்த கடைக்கு ‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், நேற்று காலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து கடையின் வாயில்களில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர் கடைக்குள் யாக சாலை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த சாமி படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. மேலும் செல்வபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு கிருமி நாசினி, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணியளவில் கோவையில் இருந்து வேன் மூலம் சரக்கு பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. இதற்கிடையில் விதிமுறையை மீறி ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்த குளத்துப்பாளையம் டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்ற அதிகாரிகள் அந்த கடையை சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 88 கடைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளன. இந்த கடைகள் திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் உள்ள 207 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்படும். இந்த கடைகளில் வேலை செய்து வந்த ஊழியர்கள் மற்ற கடைகளில் கூடுதல் பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.50 கோடி மதுபாட்டில்கள்

மதுக்கடைகளில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு நின்று மதுபாட்டில்கள் வாங்கிச்செல்லும் வகையில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளதுடன், தடுப்புகளும் அமைக்கப்படுகிறது.

கட்டங்களில் நின்றுதான் மதுபாட்டில்களை வாங்க வேண்டும். முண்டியடித்துக்கொண்டு வந்தால் மதுபாட்டில்கள் வழங்கப்பட மாட்டாது. டாஸ்மாக் கடைகளில் கிருமிநாசினி தெளிப்பு, கிருமி நாசினி திரவம் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளுக்கும் தேவையான மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story